ஒவ்வொரு வருடமும் சாரல் தமிழ் மன்றம் பல்வேறு தமிழ்ப் பாரம்பரிய நிகழ்ச்சிகளையும், தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி ஒவ்வொரு வருடமும் INSTINCTS என்ற பெயரில் மார்ச் மாதம் மாபெரும் கலைத் திருவிழாவை கல்லூரி நிறுவனர் திரு. சிவ நாடார் அவர்கள் தலைமையிலும் கல்லூரி தலைவர் திருமதி. கலா விஜயகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் திரு. சாலிவாகணன், கல்லூரி டீன் முனைவர் திரு. கஸ்தூரி ஆகியோர் தலைமையிலும் நடத்தி வருகிறது. இதில் சாரல் தமிழ் மன்றத்திற்கு பெருமதிப்பும், பங்கும் வழங்கப்படுகிறது.
2008 – 2009ஆம் ஆண்டு
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்று நாள் கலைத் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்களும் கல்லூரி முழுவதும் கலைக் கோலம் பூண்டு விளங்கியது. முதல் நாளில் விஜய் டீவி நீயா நானா புகழ் திரு. கோபிநாத் அவர்கள் சாரல் தமிழ் மன்றத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முதல் நாளும் இரண்டாம் நாளும் கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, குறுக்கெழுத்துப்போட்டி போன்ற போட்டிகள் பல தமிழறிந்த நடுவர்கள் தலைமையில் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். மூன்றாம் நாள் சொல்லின் செல்வர் திரு. சுகி சிவம் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். தமிழின் இன்றியமையாமையை மாணவர்களிடையே எடுத்துரைத்தார். மூன்றாம் நாள் இறுதியில் தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்வாறு 2009ஆம் ஆண்டு சாரல் தமிழ் மன்றம் செயலாற்றியது.
2009 – 2010ஆம் ஆண்டு
2010ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பற்றிய பயிற்சித்திறன் வகுப்புகள் பல சாரல் தமிழ் மன்றம் நட்த்தியது.மார்ச் மாதம் நடைபெற்ற மூன்று நாள் கலைத் திருவிழாவில் முதல் நாளன்று சொற்பொழிவாளர் மற்றும் சிறந்த எழுத்தாளரான திரு. சுப வீரபாண்டியன் அவர்கள் சாரல் தமிழ் மன்றத்தை தொடக்கி வைத்து வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தமிழ் பெற்றுள்ள பெருமையைப் பற்றி பேசினார். முதல் இரண்டு நாட்களிலும் வழக்கம்போல் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மோதிப்பார், கவியரங்கம், குறுக்கெழுத்துப் போட்டி போன்ற பல போட்டிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். திரைப்பட நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் தமிழ் வேட்டை என்ற போட்டிக்கு நடுவராக இருந்து பரிசுகளை வழங்கினார். மூன்றாம் நாளன்று பட்டிமன்றப் புகழ் திரு. ராசா அவர்கள் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒன்று கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ திரு. விவேக் அவர்களும், கல்லூரி தலைவர் திருமதி. கலா விஜயகுமார் அவர்களும், கல்லூரி முதல்வர் முனைவர் திரு. சாலிவாகணன், கல்லூரி டீன் முனைவர் திரு. கஸ்தூரி அவர்களும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். மூன்றாம் நாளன்று இறுதியாக “சென்னைச் சங்கமம்” புகழ் கலைக்குழுவின் தமிழ் பாரம்பரிய கலைகளான பொம்மலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
2010 – 2011ஆம் ஆண்டு
2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “தமிழ் தளிர்” என்ற பெயரில் எங்கள் கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நட்த்தப்பட்டன. கல்லூரி முதல்வர் திரு. சாலிவாகணன், டீன் திரு. கஸ்தூரி மற்றும் தமிழ் மன்ற பொறுப்பாசிரியர் திரு. முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி பாராட்டினர். 2011 மார்ச் மாதம் நடைபெற்ற மூன்று நாள் INSTINCTS கலைத்திருவிழாவில் முதல் நாளன்று பட்டிமன்ற ஆசான் முனைவர் ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்கள் தமிழ் மன்றத்தைத் தொடக்கி வைத்து தமிழ் துளிர் இதழை வெளியிட்டார். அவரோடு புதிய தலைமுறை வார இதழின் துணை நிர்வாக இயக்குனர் திரு. ஷியாம் குமார் அவர்களும் கலந்து கொண்டார். இரண்டாம் நாளன்று குறுக்கெழுத்துப்போட்டி, மோதிப்பார் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு கல்லூரிகளிலிருந்து பல மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இரண்டாம் நாள் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” நிகழ்ச்சிக்கான தகுதிச் சுற்றும் நடைபெற்றது. இரண்டாம் நாள் இறுதியில் சென்னை “ஆதித்தமிழர்” கலைக்குழுவின் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மூன்றாம் நாளன்று பட்டிமன்ற நடுவர் முனைவர் திரு. கு. ஞானசம்மந்தன் அவர்கள் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திரைப்பட இயக்குனர் திரு. சாமி அவர்களும், கல்லூரி முதல்வர் முனைவர் திரு. சாலிவாகணன், கல்லூரி டீன் திரு. கஸ்தூரி அவர்களும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். புதிய தலைமுறை வார இதழ் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சாரலின் ஒரு அங்கமாக பல வகையிலும் உதவி புரிந்து தமிழின் பெருமையை பறைசாற்றுகிறது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாரல் தமிழ் மன்றமும், எங்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட குழுவும், யுவசக்தி தொண்டு நிறுவனமும் இணைந்து தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கிடையே பல்வேறு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவ்வாறு சாரல் தமிழ் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் தமிழின் பெருமையை நிலைநாட்டவும், கல்லூரி மாணவர்களிடையே தமிழை வளர்க்கவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
2011 – 2012ஆம் ஆண்டு
இந்த ஆண்டு கடந்த எந்த ஆண்டையும் போல் இல்லாமல் ஆண்டின் தொடக்கம் முதலே ஒவ்வொறு மாதமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதன் தொடக்கமாக ஆகஸ்டு 5, 2011 அன்று எழுத்தாளர் திரு. தமிழருவிமணியன் அவர்களின் தலைமையில் சாரல் தமிழ் மன்ற தொடக்க விழாவும் சாரல் தமிழ் மன்ற இணையதள தொடக்க விழாவும் நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கிடையேயான ஒரு நாள் தமிழ்த் திருவிழா நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு கல்லூரியின் உள்ளே மட்டுமல்லாமல் மற்ற கல்லூரிகள் மற்றும் புதிய தலைமுறை வார இதழுடன் இணைந்து தமிழை வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் கல்லூரி மாணவ மாணவியருக்கு உபயோகப்படும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே தமிழின் பெருமையை நிலைநாட்டவும், தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கையை வளர்க்க முடியும் என் நம்புகிறோம். இது மாணவர்களுக்கும் பெரும் உதவியாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தமிழ் வாழ்க…